Sunday, July 10, 2011

அறியாரோ?

நான் ஜீன்ஸ் அணிவது
அம்மாவுக்கு மட்டுமல்ல
அண்ணாவுக்கும் பிடிக்காது.
சேலை அணியச் சொல்லி
பல அறிவுரைகள் தினமும்.
சின்னச் சின்னச் சண்டைகள்
'ஆட்டக்காரி' என்று என் காதுபட
அயலாரின் முணுமுணுப்புக்கள்
...................
சேலை அணிந்து பயணிக்கையில்
'பிரா' வை,
 நழுவும் உட்பாவாடையை
சரி செய்யும்பொழுதுகளில்
நடுவில் தெரியும்
வயிற்றை மறைபதற்காய்
நான் முயலும் பொழுதுகளில்
 நான்படும் அவஸ்தைகளை 
மொய்க்கும் காமக்கண்களை
அம்மா அறியாளோ?
அண்ணாவும் அறியானோ?
அயலார் அறியாரோ?
_ தாரணி

Saturday, July 2, 2011

தோழி...! உனக்குத்தான்

தோழி...! உனக்குத்தான்
====================
தாலி அணிந்து
தலை குனிந்து உன் மாமியுடன்
வெள்ளவத்தையில் நீ
நடந்து சென்றது நேற்றுக் கண்டேன்.
உன்னுடன் பேச எனக்கு விருப்பமில்லை
அதனால் ஒதுங்கிப் போனேன்.

இந்தியாவுக்கு வந்து
தாலி கட்டிவிட்டுச் சென்ற
உன் கணவனிடம் செல்ல நீ
கொழும்புக்கு வந்துள்ளாய் போல
நன்று!

போய் வா தோழி!
அந்தக் காலத்தில்
நீயும் நானும்
பெண்விடுதலை,சம உரிமை
என்றெல்லாம்
கல்லூரியில் மேடை ஏறி பட்டிமன்றங்களில்
முழங்கியதெல்லாம பொய்யா?

குமரன்,
உன்சாதி இல்லை என்பதனால் தானே
நீ உன்னை உயிராய்
நேசித்தவனை விட்டு விட்டு
உன் கொள்கைக்கு(?) மாறாய்
சீதனம் கொடுத்து
நாளை கனடாவுக்கு
போகிறாய்!

நீ ஒருத்தி மட்டுமல்ல
உன்னைப் போல
பலர் இங்குள்ளார்.

என் பேனா எழும்
அடிமைப்படுத்தும்
ஆண்களுக்கு எதிராய்
மட்டுமல்ல
உன்னைப் போல
மாஜக் காரிகைகளுக்கு
எதிராகவும் எழும்.
-தாரணி