Tuesday, June 7, 2011

உண்மையைச் சொல்லிவிடு

மெல்ல அசையும் தொங்குபாலமதில்
நாங்கள் கரம் கோர்த்து
நடந்த பொழுதுகளில்
நீ வெள்ளாளன் என்பதும்
நான் அதுவல்ல என்பதும்
உனக்குத் தெரியாதா?

துள்ளி ஓடும்
மாவலியின் கரைகளில்
நாங்கள் பரவசித்திருந்த பொழுதுகளில்,
நீ கத்தோலிக்கன் என்பதும்
நான் அதுவல்ல என்பதும்
உனக்குத் தெரியாதா?

மூங்கில் ஓரம்
பற்றைகளின் மறைவில்
நாங்கள் சல்லாபித்திருந்த பொழுதுகளில்,
உனக்குச் சீதனமாய்த் தர
எங்களிடம் 'வெள்ளவத்தை'யில் சொந்த வீடோ,
அது வாங்க வசதியோ இல்லையென்பது
உனக்குத் தெரியாதா?

உன் சாதகம் இப்போது
'வேல் அமுதன் திருமண சேவை'யில்
பத்து மில்லியன் பிரிவுக் கோப்பிலும்
என் பெயர் ஊராரின்
'நடத்தை கெட்டோர்'
பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?

2 comments:

  1. ஆறுதல் சொல்ல வார்த்தைகளில் வலிமை இல்லை...

    ReplyDelete
  2. நன்றி வேலுச் சாமி , எவ்வாறு இப்பக்கத்திற்கு வந்தீர்கள்

    ReplyDelete